பாதாள உலக கும்பல் கைதால் கவலையடைந்துள்ள நாமல்
இந்தோனேசியாவிலிருந்துபாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயமல்ல என்றும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ச ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தோனேசியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரணமாகக் கருத வேண்டாம்.
எமது குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இரு நாட்டு பொலிஸார், சர்வதேச பொலிஸ், இந்திய புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதாரண விடயமல்ல
இந்த ஐவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதென்பது சாதாரண விடயமல்ல. இதனை விட பாரிய குற்றங்கள் தொடர்பில் அறிந்திருப்பதால் நாமல் ராஜபக்சவுக்கு இது சாதாரண விடயமாக இருக்கலாம்.
எனவே இது அவர்களுக்கு சிறிய விடயமாக இருந்தாலும் நாட்டுக்கு பெரிய விடயமாகும். அடுத்த கட்ட விசாரணைகளில் வெளியாகவிருக்கும் தகவல்களில் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட பலரது தகவல்களும் வெளியாகும்.
படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்படி விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றப்புலனாய்வு திணைக்களமும், பொலிஸாரும் மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவர்.
மக்களின் பாதுகாப்பு
அத்தோடு, மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிறிதாக எண்ண வேண்டாம் என்றும், சற்று முற்போக்காக சிந்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அண்மையில் ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சிலரது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த விடயத்தில் நாமல் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைந்தார் என்பது எமக்கு தெரியும். அத்தோடு, குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



