புலம்பெயர் நாடுகளில் உள்ள இவர்களின் நிலைக்கு யார் காரணம்? ஆதங்கப்படும் ஈழத்து இளைஞன்
வெளிநாடுகளை பொறுத்தவரையில் இலங்கை ஈழத்தமிழர்களின் வாழ்க்கை பற்றிய வரலாறுகளை இளையோர்களுக்கு புலம்பெயர் பெற்றோர்கள் கூறுவதில்லை, அச்சப்படுகின்றனர் என ஹொலிவூட் பயணத்தில் கால் பதித்துள்ள ஈழத்து இளைஞரான பவன் தெரிவித்துள்ளார்.
இவை எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பாகவும், தமிழர்களின் வரலாறு அழிந்து செல்வதற்கான வாய்ப்பாக காணப்படுவதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்களின் நீதி தேடும் படலம் தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழராக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிலையில், ஹொலிவூட் பயணம் ஊடாக இசைத்துறையில் தனது கால்களை பதித்து இசை ஊடாக ஈழத்தமிழர்களுக்கான விடயங்களை கையாளும் விதம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
12 வருடங்கள் கடந்த பின்னர் இலங்கையில் இடம்பெற்ற பிரச்சினைகளை பற்றி பேச முன்வருவதில்லை. மேலும் வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மிக குறைவாகவே காணப்படுகின்றது.
மேலும் அவுஸ்திரேலியாவினை பொறுத்த வரையில், இங்கு வாழும் தமிழர்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்திலேயே தமது வாழ்க்கையை நடத்தி செல்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே இசைகள் மூலம் ஈழத்தமிழர்களின் வரலாறு என்றும் பாதுகாக்கப்பட வேண்டுமென இசை துறையின் ஊடாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு தமிழராலும் இசைத்துறையில் ஹொலிவூட் பயணம் மூலம் முன்னுக்கு வர முடியும். தமிழர்களின் அடையாளம் மறையக்கூடாது. இளையோர்களுக்கு இவையொரு எடுத்துக்காட்டாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து தமிழர்களின் புலம்பெயர்வு 1980களில் இருந்து கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்திருக்கின்றது.
இரண்டாம் தலைமுறைத் தமிழர், பல்வேறு நாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பிக்கின்றனர். புத்தம் புதிய துறைகளில் கால்பதிக்கின்றனர். வாழ்வில் உச்சத்தைத் தேடுகின்றனர்.
அத்தகைய ஒருவரே பவன் இளங்குமரன். சினிமாவுக்கு இசையமைப்பதில் பயிற்சி பெற்ற பவன், ஹோலிவூட்டில் கால்பதிப்பதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
பவன் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பிறந்தவர். சரளமாகத் தமிழ் பேசுபவர். பல்கலைகழகப் புகுமுகவகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர். சுழிபுரம் இளையதம்பி தம்பதிகள் மற்றும் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருணாசலம் தம்பதிகளின் இவரின் தந்தையார் இளங்குமரன் கலையைக் கைவண்ணத்தில் கொண்டுவரக்கூடியவர். தாயார் மீனா கலையுணர்வை பரதநாட்டியத்திலே வடித்தெடுப்பவர்.
அந்தவகையிலே, கிழக்கத்திய இசைமேடைகளில் சிறுபிராயம் முதலே, மெல்பேர்னில், தடம் பதிப்பவர். சென்னையில் நடைபெறுகின்ற இசைநடன விழாக்களில் கலந்துகொள்பவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகவியல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்.
அமெரிக்காவின் புகழ்பூத்த பெர்க்லி இசைக் கல்லூரியில் இசையமைப்பு, எலெக்ட்ரோனிக் தொழிநுட்பவழி இசைவடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பட்டம் பெற்றவர்.
தமிழ் இளைஞரான பவன் இளங்குமரனின் ஹோலிவூட் பயணம், இசைத்துறையில் வளர விரும்புகின்ற இளையவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.