நிதியமைச்சை கோரும் இலங்கையின் பெரும் புள்ளி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சை யார் பொறுப்பு எடுப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கசினோ வர்த்தகர் தம்மிக்க பெரேரா நிதியமைச்சர் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சு அல்லது பிரதமர் பதவிக்கு நிகரான மற்றுமொரு பதவியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வழங்கிய உறுதி
எனினும் அவருக்கு வெளிநாட்டு முதலீடு தொடர்பான அமைச்சுப் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மக்கள் முன்னணியின் முகாமைத்துவ செயலாளரும் மில்கோவின் தலைவருமான ரேணுகா பெரேரா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்கவை நியமிக்குமாறு பசில் கோரிய போதிலும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பசிலை நிராகரித்த கோட்டபாய
கடந்த காலத்தில் பி.பி. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவின் கைதியாக இருந்த ஜனாதிபதி இம்முறை வர்த்தகர் ஒருவரின் கைதியாக மாறியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தம்மிக்க பெரேராவின் சகோதரர்கள் இருவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 575 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகையை ஒரே தடவையில் செலுத்த தம்மிக்க பெரேரா இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.