குண்டு தாக்குதலை நடத்த சஹ்ரானை தூண்டியது யார்? விசாரணை அறிக்கை தொடர்பில் தயாசிறி கூறியுள்ள விடயம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த தாக்குதலுக்காக சஹ்ரானை தூண்டியது யார் என்பதை கண்டறிந்திருக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த ஆணைக்குழுவின் இறுதி முடிவுகளுக்கு அமைய அதற்கான குற்றவாளிகள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தயாசிறி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்தியது யார் என்பது தான் எமக்கு உள்ள கேள்வி. சஹ்ரான் குண்டுகளை வெடிக்க செய்தார். சஹ்ரானை தற்கொலை தாக்குதல் நடத்துமாறு கூறியது யார் என்பதே பிரச்சினை. அந்த சக்தியை தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குண்டு தாக்குதலை நடத்த சஹ்ரானை தூண்டியது யார் என்ற விடயம் இருந்திருக்க வேண்டும். யார் பின்னணியில் இருந்தனர் என்ற விடயம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு அமைய, எமது கர்தினால் அவர்கள் கூறுவது போல், குற்றவாளி ஒருவர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வெவ்வேறு நபர்களை குற்றவாளிகள் எனக் கூறியுள்ளனர்.
குண்டு தாக்குதலை நடத்தியது மைத்திரிபால சிறிசேனவோ, ஞானசார தேரரரோ அல்ல எனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.