பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாதோருக்கு பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை! (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பு பதிவு, திருமண பதிவு, இறப்பு பதிவு என்பவற்றினை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் நடமாடும் சேவை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வாகனேரி பிரிவிற்கான நடமாடும் சேவையும், பிறப்பத்தாட்சிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் வாகனேரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிதாக பிறப்பினை பதிவு செய்வதற்காக வருகை தந்த சுமார் 57 விண்ணப்பதாரர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 42 பேருக்கான பிறப்பத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டது.
சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரை 07 இன் பிரகாரம் ஒரு பிள்ளை தனது பிறப்பினை பதிவு செய்து கொள்வதற்கும் அதற்கான தேசியம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது என கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு இதன்போத தெரிவித்துள்ளார்.











