எரிவாயு மற்றும் வெள்ளைப்பூடு தொடர்பில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட தயாராகும் முன்னாள் பணிப்பாளர்
வெள்ளைப்பூடு மோசடி மற்றும் எரிவாயு கொள்கலன் விடயங்கள் தொடர்பில், மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின், முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன (Dushan Gunawardena) தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர், பல அமைச்சுக்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகள் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.
அதிகாரசபையில் இருந்து வெளியேறியதன் மூலம் அரச நிறுவனங்களில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை வெளிப்படுத்தி பொதுமக்களுக்கு மேலும் நன்மையை பெற்றுக்கொடுக்கமுடியும் என்று நினைப்பதாக குணவர்தன தெரிவித்துள்ளார்
இது தொடர்பான, அனைத்து தகவல்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஒருவரின் அரசியல் பணிகளுக்காக நிதியை விடுவிக்குமாறு, ஒரு அமைச்சு கோரியதாகவும், அதற்கு தாம் உடன்பட மறுத்ததாகவும் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு கொள்கலன் பியூட்டேன் மற்றும் புரோபேன் கலவை மாற்றப்பட்டுள்ளமையால், ஏற்படவுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் மே மாதம் ஜனாதிபதியிடம் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கலவையில் கூறப்படும் மாற்றம் நுகர்வோருக்கு தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என ஏற்கனவே குணவர்தன கூறியிருந்தபோதும், அண்மையில் எரிவாயு கொள்கலன் வெடிப்புகள், விளக்குகள் போன்றவற்றின் தீப்பொறிகளால் ஏற்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பொதுமக்கள், எரிவாயு கொள்கலன்களை வைத்திருக்கும் பகுதியில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்
அதேநேரம் சோதனை நடத்தப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் வரை சந்தையில் உள்ள எரிவாயு கொள்கலன்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின், முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன கோரியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |