கோவிட் தடுப்பூசிகளால் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றதா? - வைத்தியர் வெளியிட்ட தகவல்
வணிக நோக்கங்களே, இலங்கையில் செயலில் உள்ள தடுப்பூசி எதிர்ப்பு இயக்கங்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி எதிர்ப்பு பிரசாரங்களை ஊக்குவிக்கும் வலைத்தளங்களுக்கு பின்னால், வர்த்தக நோக்கமே உள்ளது.
அத்துடன் வேறு சில சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், கோவிட் தடுப்பூசியை விமர்சிக்கும் போக்கு இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க (Prof. Manuj Weerasinghe) தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு மருத்துவர் தடுப்பூசி செலுத்தலை சமூக ஊடக தளத்தின் மூலம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர் தனது எதிர்ப்பு பிரசாரத்தின் பின்னால் ஒரு வணிக நோக்கத்தைக் கொண்டுள்ளார். அவர் மற்றொரு சிகிச்சை முறையை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார்.
இந்த பிரசாரத்தின் பின்னணியில் வேறு சிலரும் உள்ளனர் என்று மனுஜ் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 20 முதல் 30 அகவைக்குட்பட்ட இளைஞர்கள் தங்களின் உயிரைப் பாதுகாக்க தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும், எந்தவொரு எதிர்ப்பு பிரசாரத்தையும் நாட வேண்டாம் என்றும் அனைவரையும் மனுஜ் வீரசிங்க கேட்டுக்கொண்டார்.
கோவிட் தடுப்பூசிகளால் ஆண்மைக் குறைவு மற்றும் கருவுறாமை போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற வதந்திகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்தார்.