ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னணியிலுள்ள பலமான சக்தி
அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் நேற்று பிற்பகல் கொட்டாவ ருக்மலை தர்மவிஜயலோக விகாரைக்கு விஜயம் செய்தார். சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, பின்னர் கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவர் இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில், நாட்டின் ஜனாதிபதியாக நான் இங்கு வந்திருக்கின்றேன். உங்களுடைய ஆலோசனையினால் தான் இங்கு வர முடிந்தது. இல்லையென்றால் ரணில் விக்ரமசிங்கவாகத்தான் இங்கு வரவேண்டும்.
நாட்டை மீட்டெடுக்க முயற்சி
பிரதமர் பதவியை ஏற்பதா இல்லையா என நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது மற்ற விடயங்களை ஒதுக்கி வைக்குவிட்டு நாட்டை குறித்து சிந்திக்குமாறு கூறினீர்கள். அங்கிருந்துதான் இந்த பயணம் தொடங்கியது.
பிரதமர் என்ற முறையில் அரசியலமைப்பிற்கமைய செயல்படுவது எனது கடமையாகும். அன்றிரவு நான் எவ்வளவு தனிப்பட்ட சேதங்களை சந்தித்தாலும், பிரதமராக நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தின்படி இந்த அரசியலமைப்பை பாதுகாப்பதே எனது முதல் கடமையாகும். ஏனென்றால் இதை கடமையை விட்டுவிட்டு செயற்பட்டிருந்தால் நாடு பேரழிவிற்கு சென்றிருக்கும்.
தனிப்பட்ட சேதங்களை பின்னர் தீர்க்க முடியும். நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண முடியாது. நாடாளுமன்றத்தின் இறையாண்மை மக்களால் செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மகா சங்கத்தின் ஆதரவு
வீடுகளை எரிப்பதால் பலனில்லை, குறிப்பாக அச்சுறுத்தி பிரச்சினைகளை தீர்க்க முடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
இப்போது நாம் கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த நாட்டை மீட்க முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இப்போது சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மகா சங்கத்தின் பங்களிப்பு முன்னிலையாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, அவரை உடனடியாக பதவி விலகுமாறு மகா சங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.