ஹரினுக்கு பேச தெரியவில்லை! வாக்குவாதத்துக்கான காரணத்தை வெளியிட்ட சரத் பொன்சேகா!
மே தினக் கூட்டத்தில் தம்முடன் மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோவுக்கு எதிராக கட்சித் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ பொதுமக்கள் முன்னிலையில் என்ன சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் மே தினப் பேரணியில் பேச்சாளர் பட்டியல் தொடர்பாகவே அவருடன் தமக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாக பொன்சேகா குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில உறுப்பினர்களின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் பேச்சாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பேரணியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எனினும் தாம், அதற்கு கண்ணியமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தபோது பெர்னாண்டோ தவறாக நடந்து கொண்டார்.
இதுபோன்ற நடத்தை கட்சியின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் எதிர்காலத்தில் அப்படி நடந்து கொள்ளக்கூடாது சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
இதேவேளை, மே தின பேச்சாளர் பட்டியல் கட்சியில் குறிப்பிட்ட சிலரின் நன்மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை ஹரின். பெர்ணான்டோ மறுத்துள்ளார்.
எவரையும் தனிப்பட்ட ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், முழு போராட்டத்திற்கும் தாமே செலவுகளை செய்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கட்சி முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் எதிர்காலத்தில் தனித்து விடப்படுவார்கள் என்றும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
