“வாழ்வதை விட சாவதே மேல்“எதை சாப்பிடுவது? மக்கள் ஆதங்கம் (VIDEO)
இலங்கையில் மேல் மாகாணத்தின் மிகப்பெரிய சந்தையான பேலியகொட மெனிங் சந்தையில் கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது மரக்கறிகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பல பொருளாதார வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். போஞ்சி, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவை வரலாறு காணாத வகையில் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 300 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் 200 ரூபாவிற்கும் லீக்ஸ் 300 ரூபாவிற்கும், தக்காளி 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. நாட்டில் அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் டிசம்பர் 3 ஆம் வாரம் வரை தொடரலாம் என கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள், உரப் பற்றாக்குறை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போதுள்ள நிலைமையில எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடுமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தலையிட்டு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
இதனிடையே நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு சமைத்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
எனினும் உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் ஜனவரி
மாதத்துக்குப் பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என ஸ்ரீலங்கா
அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.