கோவிட் தொற்றுக்கு உள்ளான சிறார்கள் உயிரிழக்க காரணம் என்ன?
தாமதமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வரப்படுவதே கோவிட் தொற்றுக்கு உள்ளான சிறார்கள் உயிரிழக்க பிரதான காரணம் என சிறுவர் தொடர்பான நோய் மற்றும் மரணங்கள் குறித்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முகாமையாளர் சமூக மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன (Kapila Jayaratne) தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை 53 ஆயிரம் சிறார்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களுக்குள் கோவிட் காரணமாக 64 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.2020 ஆம் ஆண்டு இரண்டு சிறார்கள் உயிரிழந்தனர். ஏனைய 62 பேரும் இந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 31 சிறார்கள் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள்.16 பெண் குழந்தைகள் இவர்களில் அடங்குகின்றனர்.
ஒரு வயதுக்கும் 5 வயதுக்கும் இடைப்பட்ட வயதை சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 7 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 64 சிறார்களில் 33 பேருக்கு நோய்கள் இருந்துள்ளன. இவர்கள் அனைவரும் வீடுகளில் இருந்த பிள்ளைகள். இவர்கள் சமூகத்திற்குள் செல்லவில்லை.
இந்த மரணங்களை ஆராய்ந்த போது நாங்கள் அறிந்து கொண்ட பிரதான விடயம் தாமதமாகி வைத்தியசாலைக்குள் வந்தமை இந்த மரணங்களுக்கு காரணம் என்பதாகும் எனவும் மருத்துவர் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.