தேசபந்துவை கைது செய்யும் உத்தரவுக்கு முன் நிகழ்ந்தது என்ன..! முன்னாள் அமைச்சரின் சூழ்ச்சியா..
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் ஏதேனும் சூழ்ச்சி திட்டமிடப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலந்துகொண்டவர்கள் தொடர்பில் பிரச்சினை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்திலிருந்த பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையத்தில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் பார்த்தால் அது பிரச்சினைக்குரியதாகவுள்ளது.
குறித்த கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சூளாகொடிதுவக்கு, கொழும்பு குற்றவியல் பிரிவில் இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் நெவில் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் வராமையினால் அவரின் சகா இனியபாரதியை அனுப்பியுள்ளார்.
இனியபாரதி தனியார் ஹோட்டல் ஒன்றில் இருந்துள்ளார். அவரின் வாகனத்தை சுதா என்பவர் செலுத்தியுள்ளார்.
பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள்
இங்கு என்ன சூழ்ச்சி செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பில் உங்களுக்கு எதுவும் தெரியுமா? இனிய பாரதி என்பவர் கடந்த காலங்களில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர். பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள் உள்ளன.
நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறுகின்றீர்கள். ஆனால் கணேமுல்லை சஞ்சீவவை கொன்ற பெண்ணை இன்னும் தேடுகின்றீர்கள்.
நாட்டின் பொலிஸ்மா அதிபரையும் தேட முடியவில்லை. உங்களுக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை உள்ளது குறித்த கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவ்வாறான தேசிய பிரச்சினைகள் பற்றி பேசும் போது சபாநாயகர் எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அதேபோல் நாடாளுமன்ற செயலாளர்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். சபை நடவடிக்கைகள், முறைமைகள் தொடர்பில் சபாநாயகருக்கு சொல்லிக் கொடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |