அழகு ராணி ஒருவருடன் சிறைச்சாலைக்குள் சென்றேனா? சூழ்ச்சி நடவடிக்கையில் சிறை அதிகாரிகள்
தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் பிரசாரம் மோசடியான சிறைச்சாலை அதிகாரிகள் சிலரின் சூழ்ச்சி என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
மோசடியான சிறைச்சாலை அதிகாரிகளின் திருட்டு மற்றும் வர்த்தகங்களை கண்டறிந்து நட்டத்தை அமுல்படுத்தியதால், சிறைச்சாலைக்குள் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.
மோசடி தடுப்பு வேலைத்திட்டம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு திருட்டி வியாபாரம் செய்ய முடியாமல் போனதால், தன்னுடன் கோபத்தில் இருந்தனர் எனவும் லொஹான் ரத்வத்தே கூறியுள்ளார்.
வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்றது உண்மை. எனினும் பிரசாரம் செய்யப்படுவது போல் எவ்வித சம்பவங்களும் நடக்கவில்லை.
சிறைச்சாலைகளின் நிலைமை மற்றும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து பரிசோதிக்கவே சிறைச்சாலைகளுக்கு சென்றேன்.
அடிக்கடி சிறைச்சாலைகளுக்கு சென்று சிறையறைகள், சமையல் அறை ஆகியவற்றை பரிசோதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
நான் அழகு ராணி ஒருவருடன் சிறைச்சாலைக்குள் சென்றதாக பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. நான் அப்படியான பெண் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை. அத்துடன் தனிப்பட்ட ரீதியிலும் எனக்கு அவர் அறிமுகமற்றவர் எனவும் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.