கொழும்பில் வெளிநாட்டவர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி - பின்னணியில் செயற்பட்ட பெண்
கொழும்பில் சீன நாட்டவர்களிடம் இலஞ்சம் கோரிய வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டவர்கள் சிலரின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகத் தன்வசம் வைத்திருந்து, அவற்றை விடுவிப்பதற்காக பணத்தை கப்பமாக பெற முயன்ற குற்றச்சாட்டில் வெலிகடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
வேயங்கொட பகுதியில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டவர்கள் கைது
இராஜகிரிய பகுதியில் வைத்து 19 சீன நாட்டவர்களை பொலிஸார் தடுத்து வைத்த சம்பவத்தைத் தொடர்ந்தே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த சீனர்களின் கடவுச்சீட்டுகளைப் பொறுப்பதிகாரி தன்வசம் வைத்திருந்துள்ளார்.
அந்தப் பயண ஆவணங்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காக ஒருவரிடமிருந்து தலா 300,000 ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பெண் இடைத்தரகர் ஒருவர் ஊடாக இந்தக் கப்பக் கோரிக்கையை முன்வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.