புதிய பிரதம செயலாளருக்கு வவுனியாவில் வரவேற்பு
வவுனியா அரச அதிபராகக் கடமையாற்றி வடமாகாண பிரதம செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச்செல்லும் சமன் பந்துலசேனவிற்கு வவுனியாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக வவுனியா மாவட்ட செயலக வாயிலிலிருந்து மங்களவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட பிரதம செயலாளருக்கு மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், அரச உயரதிகாரிகள், மதகுருமார்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது பிரதம செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
அரச அதிபராகக் கடமையாற்றிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எனக்குப் பக்கபலமாகச் செயற்பட்ட அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்கின் பிரதம செயலாளராகக் கடமை ஏற்கவுள்ள நிலையில் வடமாகாண மக்களுக்கு இனமத பேதமற்று எனது சேவையை பணிகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.