திருமணத்தில் கலந்துக்கொண்டோருக்கு திடீர் சுகவீனம்:தேன் நிலவுக்கு வெளிநாடு சென்ற புதுமண தம்பதியும் வைத்தியசாலையில்
கண்டி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அண்மையில் நடந்த திருமண வைபவத்தின் பின்னர் திடீரென சுகவீனமுற்ற சுமார் 600 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமணத்தின் பின்னர் தேன் நிலவுக்காக மலேசியா சென்ற புதுமண தம்பதியும் அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கண்டியில் உள்ள முன்னணி வர்த்தக குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் திருமணம் இந்த ஹோட்டலில் நடந்துள்ளது.
திருமணத்தின் பின்னர் புதுமண தம்பதி வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. இதனடிப்படையில் புதுமண தம்பதி அன்றைய தினம் இரவு வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் திருமணத்திற்கு வந்தவர்கள் வீடுகளுக்கு செல்லாது நேரடியாக சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளனர்.
உபாதைகள் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த நிலைமை காரணமாக திருமணத்தை நடத்திய வர்த்தகரும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஹோட்டலில் உணவு, குடிநீர் உட்கொண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் உள்ள இந்த ஹோட்டல் அன்றைய தினத்தில் மேலும் இரண்டு திருமண வைபவங்கள் நடந்துள்ளன. அவற்றில் கலந்துக்கொண்டவர்களுக்கு இதே நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சுகாதார பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுகாதார பிரிவினர் ஹோட்டலில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக நேற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் நடந்து சில தினங்கள் கடந்த பின்னர் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதால், விசாரணை நடவடிக்கைகளுக்கு தடையேற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர.