இலங்கையின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன் - வானிலை அவதான மையம் வெளியிட்டுள்ள தகவல்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் வானிலை அவதான மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும், குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதேவேளை கொஸ்கொட, தவலம, தெனியாய, பன்மூர் மற்றும் உடமத்தல ஆகிய இடங்களில் சூரியன் இன்று மதியம் 12.09 மணியளவில் நேரடி உச்சம் கொடுக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
