வடக்கு - கிழக்கில் கனமழை இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு
வடக்கு, கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "மட்டக்களப்பில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 48 மணிநேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 36 மணி நேரத்தில் 125 மி. மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகின.
வெள்ளம் தொடர்பில் எச்சரிக்கை
தொடர்ந்து இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நகர பிரதேசங்களை அண்மித்த - தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அந்தக் கால பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும். இம்முறை மழையின் போக்கில் மிகப்பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.

ஒப்பீட்டளவில் குறைந்த மழையை பெறும் மாவட்டங்கள்
குறிப்பாக அதிகளவிலான மழையைப் பெறுகின்ற வவுனியா மற்றும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மழையைப் பெற்றிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நுண் காலநிலை வேறுபாடுகளை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்." - என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |