தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தால் அப்பகுதியில் தொடர்ந்தும் பலத்த காற்று காணப்படுகின்றது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புக்களில் வடகிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றானது 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறைந்த காற்றழுத்தத்தின் தாக்கம்
இதேவேளை திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புக்களிலும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 55 வீதம் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், மேற்குறிப்பிட்ட கடற்பரப்புக்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மழை வீழ்ச்சி தொடர்பான தகவல்
காற்றழுத்த தாழ்ப்பகுதி காரணமாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இந்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லி லீட்டருக்கும் அதிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டை சூழவுள்ள ஏனைய பகுதிகளில் சில பிரதேசங்களில் 75 மில்லி லீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
எனவே,கடல் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
மேலும் வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.”என கூறியுள்ளார்.
