குருந்தூர் மலையை விரைவில் மீட்போம் - துரைராசா ரவிகரன்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் தற்போது பௌத்த மயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை விரைவில் மீட்போம் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையை மீட்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ரவிகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தப் பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், குருந்தூர்மலையை மீட்க விரைவில் வழக்கு தொடரப்படும்.
தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள குருந்தூர்மலை தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமாகும். இந்த வழிபாட்டு இடத்திலேயே தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள், அரச திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அனுசரணையுடன் பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கைத் தொடர்வதற்கு பாரிய அளவில் ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். வழக்குத் தொடர்வதற்கான பெரும்பகுதி வேலைத் திட்டங்கள் முடிவுற்றுள்ளன. எனவே, விரைவில் வழக்குத் தொடரப்படும்.
அவ்வாறு எம்மால் தொடரப்படும் வழக்கின் ஊடாக, தமிழர்களின் காணாமல் ஆக்கப்பட்ட
வழிபாட்டு அடையாளங்களை மீள நிறுவுவதற்கும், எமது பூர்வீக குருந்தூர் மலையில்
இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டைத் தடுப்பதற்குமான முழு முயற்சிகளும்
தீவிரமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.