புத்தாண்டு காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மிக வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தாண்டு அதன்பின் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாகப் பண்டிகைகள் வருவதனால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புடன் செயற்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் இவ்விசேட பண்டிகை காலங்களில் ஆலயங்கள், தேவாலயங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்லலாம்.அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாகச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும்.
அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பண்டிகைக் காலங்களில் இவ்வாறான வீணான சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் பூரணமான ஒத்துழைப்பை தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
பண்டிகை காலங்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை எளிமையான முறையில் பண்டிகைகளைப் பொதுமக்கள் கொண்டாடுவது தான் கொரோனா தொற்றைக் குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தொற்றினை நமது இலங்கையிலிருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்குச் சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.