ஊழல், மோசடி அற்ற, ஒரு நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்! வெருகல் பிரதேச சபை தவிசாளர்
மக்கள் எமக்குத் தந்த ஆணையை, மதித்து, ஊழல் மோசடி அற்ற, ஒரு நிர்வாகத்தை முன்கொண்டு செல்வதற்கு, அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும், ஊழியர்களும் தயாராக இருக்க வேண்டும் என புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சேனுராமன் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதேச சபை செயலாளர் V. சுஜாதா தலைமையில் இந்த நிகழ்வில், புதிய தவிசாளர் தொடர்ந்து உரையாற்றும் போது,
ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சி
''ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சியிலேதான் பொறுப்பு கூறலும், மக்கள் பங்கு மற்றும் ஜனநாயகமும் உருவாகும்.
அப்போதுதான் இந்தப் பிரதேச மண்ணின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். தவிசாளர் உதவி தவிசாளர் பதவி என்பது, வழி நடத்துவதற்கான பொறுப்பு கூறலே தவிர, அது அதிகாரம் அல்ல. இந்த நிலையில், இந்த சபையின் 13 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, செயல்படுவது, இந்த மண்ணின் பெருமையை பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைப்பாடு, எல்லோருக்கும் நன்கு தெரியும். வெளிநாடுகளில் நாங்கள் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் எமக்குத் தந்த ஆணையின்படி, எமது கிராமத்தை அபிவிருத்தி செய்து, நாட்டுக்கு ஒரு முன்மாதிரியான பிரதேசமாக வெருகல் பிரதேசத்தை மாற்ற வேண்டும்" என்றார்.