நாங்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து நிதியமைச்சர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றோம் - வீரவங்ச
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின பங்குகள் மற்றும் எல்.என்.ஜீ விநியோகம் என்பன அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சம்பந்தமாக தான் முன் வைத்த விடயங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) விசேட கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
“எல்.என்.ஜீவிநியோகம் சம்பந்தமான பிரச்சினையே விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடினோம். நாங்கள் எங்கள் கருத்துக்களை முன்வைத்தோம். நிதியமைச்சர் அவரது விடயங்களை தெளிவுப்படுத்தினார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன.
நாங்கள் 10 அல்லது 11 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளோம்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் உடனடியாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, எமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - இது சம்பந்தமாக பிரதமரின் சாதகமான நிலைப்பாடுகள் உள்ளனவா?.
பதில் - உண்மையில் பிரதமர் நடு நிலையாக செயற்பட்டார். எந்த தரப்பின் நிலைப்பாட்டை அவர் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. நாங்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து கௌரவ நிதியமைச்சர் விசேட கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி - இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. நீங்களும் இதனுடன் இணங்குகிறீர்களா?
பதில் - நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பு. இதனால், எமக்கு அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்கங்களுடன் இணங்க முடியாது. எனினும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சில விடயங்களுக்கு நாங்கள் இணங்க முடியும். பார்ப்போம் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.