மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு
மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது.
இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது என நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவிலிருந்து அதிகமாகத் தாழிறங்கியுள்ளது.
நீர் மட்டம் குறைவு
அதன்படி இன்று (08.04.2026) காலை 6 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 47 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43.8 அடியாகவும் குறைந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கம் நிர்மாணிக்கும் போது காணப்பட்ட பல இடிபாடுகளும் தீவுகளும் மீண்டும் மேலோங்கியிருப்பதோடு நீர்த்தேக்க பகுதிமணல் தரையாக மாறியுள்ளது.
இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
"புநக்கோட்டை" - கொழும்பு பேருந்து நிலைய பெயர்ப்பலகையில் எழுத்துப் பிழைகள்! எழுந்துள்ள கடும் விமர்சனங்கள்
கோரிக்கை
மேலும் இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அந்த நீர் களனி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

நீரேந்து பகுதிகளில் மேலும் வறட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் நீர் மின் உற்பத்தியில் பாரிய அளவில் பாதிப்படையலாம் எனவும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் நீரினை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





