நீர் வெட்டு குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கொழும்பு - புற நகர்ப் பகுதிகளில் பத்து மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் (08.05.2023) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதிகள்
கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ப தற்காலிகமாக நீரைச் சேகரிக்குமாறு பிரதேச வாசிகளிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.
மேலும் தகவல் அறிய விரும்பினால், 1939 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.