இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை
இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் முதலாவதாக வங்கிகளின் உண்மையான இணையத்தளங்களை போலியாக உருவாக்கி, வாடிக்கையாளர்களின் பயனர் உள்ளீடு, கடவுச்சொல், OTP, QR code போன்றவற்றை பெற்று பணத்தை கொள்ளையிடும் நடவடிக்கை காணப்படுகிறது.
அச்சுறுத்தி பணம் பெறும் சம்பவங்கள்
அடுத்ததாக வங்கி ஊழியர்கள் அல்லது வேறு அதிகாரிகள் என தெரிவித்து போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி கணக்கு சந்தேகத்திற்குரியது என அச்சுறுத்தி பணம் பெறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை தானியங்கி இயந்திரங்களில் பணம் பெறும் போது வயதானவர்கள் மற்றும் பணம் எடுக்க தெரியாதவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேநேரம் பெறுமதியான பரிசுகள் வழங்கப்படுவதாக தெரிவித்து அந்த பரிசுகளை பெற பணம் வைப்பிலிடுமாறு தெரிவித்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்களும், பரிசுகளை பெற லிங்கை அழுத்துமாறு தெரிவித்து தொடர்பாடல் சாதனங்களை ஹேக் செய்து வங்கி தரவுகளை பெற்று அதனை பயன்படுத்தி பண மோசடி சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எச்சரிக்கை
எனவே மக்களை விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள வங்கிகளும், இலங்கை மத்திய வங்கியும் அத்துடன் பொலிஸாரும் அடிக்கடி எச்சரிக்கைகள் வழங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதன்படி OTP, PIN, password பகிர வேண்டாம், அறியப்படாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம், SMS alerts enable செய்யுங்கள், வங்கி ஊழியர்கள் அல்லது பொலிஸார் என்று அழைத்தால் உடனே நம்ப வேண்டாம் – நேரடியாக வங்கிக்கு சென்று உறுதி செய்யுங்கள், Fake links/SMSஐ தவிர்க்கவும் என்ற விடயங்களை அறிவுறுத்தியுள்ளனர்.

