பிரித்தானியாவில் உள்ள அமெரிக்கர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் அமெரிக்கர்களுக்கு லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பொது இடங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், பள்ளிகள், தேவாலயங்கள், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலின் அளவு
தேவையில்லாமல் வெளியில் நடமாடவேண்டாம் என்றும், ஒரே வகையான போக்குவரத்து பாதைகள் மற்றும் நேரத்தைப் பின்பற்றவேண்டாம் என்றும் அமெரிக்கர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதாவது, அவர்கள் வழக்கமாக எதில் பயணிப்பார்கள், எந்த நேரத்தில் பயணிப்பார்கள் என யாரும் கணிக்கமுடியாத வகையில் பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்நாட்டு உளவுத்துறையான MI5, பிரித்தானியாவில் அச்சுறுத்தலின் அளவு 'கணிசமான' என்பதிலிருந்து 'கடுமையான' என்னும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று, லண்டனிலுள்ள Golders Green பகுதியில் யூதர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் அசுறுத்தலின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.