வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உயரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய வாகனங்களுக்கு நிகரான வரி
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அதன் பெறுமதியில் 15 சதவீத வரிச்சலுகையை அரசு வழங்கி வருகின்றது.

புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியல் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியைக் கணக்கிடுகின்றது.
இதனைக் கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்திற்கு இல்லை. அந்த நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்த விலைக்கே வாகனங்கள் கிடைக்கின்றன.
ஆனால், தனிநபர்களோ அல்லது ஏனைய நிறுவனங்களோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, சுங்கத் திணைக்களம் உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையிலேயே வரியைக் கணக்கிடுகின்றது.
அதாவது, வெளிநாட்டு ஏலங்களில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கும், இலங்கையில் புதிய வாகனங்களுக்கு நிகரான வரியே விதிக்கப்படுகின்றது. இந்த அநீதியான வரிவிதிப்பால் ஏற்படும் பாரிய சுமையைத் தணிப்பதற்காகவே அன்று 15 சதவீத வரிச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.
சந்தையில் வாகனங்களின் விலைகள்
பயன்படுத்திய வாகனங்களின் தேய்மானம் அல்லது அவற்றின் பழமையைக் கருத்திற் கொண்டு தற்போதைய வரிக் குறைப்பு எதுவும் செய்யப்படுவதில்லை.
உதாரணமாக, 10 வருடங்கள் பழமையான 'குளிரூட்டி வண்டி' ஒன்றினை வெளிநாட்டு ஏலத்தில் 30 இலட்சம் யென் மதிப்புக்கு வாங்கினாலும், அதன் புதிய வாகனத்தின் விலை 120 இலட்சம் யென்களாக இருந்தால், இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய வாகனத்தின் விலையான 120 இலட்சம் யென் மதிப்புக்கே வரி விதிக்கின்றது.

இதனால், வெளிநாட்டு ஏலத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கினாலும், இலங்கைக்குக் கொண்டு வந்து சுங்க வரி செலுத்தி விற்கும் போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துவிடுகின்றது.
வெளிநாட்டு ஏல விலையுடன் ஒப்பிட்டு அரசு நியாயமான முறையில் வரியை விதித்தால், மக்களுக்கு தற்போதைய விலையை விடக் மிகக் குறைந்த விலையில் வாகனங்களை வழங்க முடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத வரி வரம்பு நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் அதிரடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரித் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கையில் சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் ஒருவனுக்குச் சொந்தமாக வாகனம் வாங்குவது என்பது முற்றிலும் இயலாத காரியமாகிவிடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.