இளைஞர் - யுவதிகளே அவதானம்! மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை
மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி அப்பாவி இளைஞர், யுவதிகளிடம் பெருந்தொகையான நிதிகள் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (06.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி சில நபர்கள் இளைஞர் யுவதிகளிடம் பெரும் தொகை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்ட செயலகம் உள்ளடங்கலாக மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் வேலை பெற்று தருவதாக கூடி குறித்த குழுவினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
நிதி மோசடிகள்
நேற்றைய தினம் (05.06.2023) தினம் கூட இவ்வாறு வேலை பெற்று தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளோடு குறித்த மோசடிக்காரர்கள் கதைப்பது போல் தொலைபேசியூடாக கதைத்து பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பொருட்கள் தருவதாக பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களை கூறியும் நிதி மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஆகவே இது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் அரச திணைக்களங்களில் அரச பதவி பெறுவதற்கு எந்த ஒரு நிதியையும் பெற்றுக் கொண்டு அரசு பதவிகள் வழங்கப்படுவதில்லை.
அதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறு பொருட்களும் கூட தனி நபர்களுக்கு வழங்குவதற்கு எந்த ஒரு நடைமுறைகளும் இல்லை அவ்வாறு செய்வது சட்டத்திற்கு முரண்பாடான ஒன்று ஆகும்.
தகவல்கள் வழங்குதல்
இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் உங்களை சந்திக்கும் போது உடனடியாக அவர்களுடைய அடையாள அட்டையை உங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு உங்கள் அருகில் உள்ள கிராம அலுவலர்கள் அல்லது பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கும்படியும் கேட்டுக் கொள்வதுடன், இவ்வாறான நிதி மோசடிகள் மன்னார் மாவட்டத்தில் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |