முகப்பூச்சு மற்றும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 35 பிராண்டுகளைச் சேர்ந்த கிறீம்கள் உட்பட 4079 வாசனை திரவிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்
சோதனையின் போது, தொடர்புடைய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவோ எந்த ஆவணங்களையும் உரிமையாளர் சமர்ப்பிக்கத் தவறியுள்ளார்.
நாட்டில் தயாரிக்கப்படும் அதே முறையில் வெளிநாட்டு பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்தல், மற்றும் வழங்குவதைத் தடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை இத்தகைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சில்லறை விற்பனை
நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் தகவல் இல்லாத வழங்குநர்களிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் அத்தகைய பொருட்களை விற்பனைக்கு வழங்க வேண்டாம் எனவும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், அத்தகைய பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.