மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி இன்று சனிக்கிழமை (07.02.2026)வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது.
இந்த நடை பவனியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளரும் பழைய மாணவருமான என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடைபவனி
பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டரின் உருவப்படத்தினை சாரணிய மாணவர்கள் தாங்கிச்செல்ல நடைபவனியானது சிறப்பாக நடைபெற்றது.
நடை பவனியில் பாடசாலையின் மாணவர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி உட்பட பல்வேறு வகையான ஊர்திகளும் கொண்டதாக இந்த பவனி நடைபெற்றது.
தொடருந்து நிலைய வீதியூடாக அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டத்தின் ஊடாக சென்று திருமலை ஊடாக தண்டவன்வெளி வரை சென்று மீண்டும் தொடருந்து நிலைய வீதியூடாக பேரணி பாடசாலையினை வந்தடைந்தது.