மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு திரட்ட புதுக்குடியிருப்பிலும் தொடரும் நடைபவனி(Video)
இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் 5 ஆவது நாள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில் இன்றைய தினம் (02.08.2023) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.
குறித்த ஆதரவுப் பயணத்தில் "மன்னார் முதல் மாத்தளை வரை" இருப்பை உறுதிப்படுத்துவோம் தோழமையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
இந்நிலையில் மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் A C G இளைஞர் அணியினர், வர்த்தக சங்கத்தினர், விழுது நிறுவன ஊழியர்கள், அமரா, சமாசம், யுகசக்தி மகளீர் சம்மேளன அங்கத்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மலையகத் தமிழ் மக்கள் கோரிக்கை
குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் விதமாக தாய்த்தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் முதல் மாத்தளை வரையான நடையணம் இச்சந்திப்பின் சந்தர்ப்பமாக அமைவதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் ஆதரவுப் பயணமாகவும் ஆரம்பிக்கும் இப் பயணத்தில் இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாகுவதற்கு மலையகத் தமிழ் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தே ஆரம்பித்துள்ளனர்.
எமது வரலாறு போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல், ஏனைய பிரதான சமுகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட சுரகந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல், தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு மனத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடடிக்கை, வாழ்விற்கான ஒர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் , பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைகளுடனான காணி உரிமை, தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து, அரசாங்க சேவைககளை சமமாக அனுகுவதற்கான வாய்ப்பு, பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல், வீட்டுப்பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு, மலையக கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்தல், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன அவர்களின் கோரிக்கைகளாக காணப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









