மாபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை! எச்சரிக்கை விடுக்கும் வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் விவசாய துறைக்கான தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளளது.
சேதன பசளை திட்டம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “சேதன பசளை திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கம் கூறிய போது எமது
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பல சவால்களுக்கு மத்தியில் தங்களுடைய முழு
உழைப்பையும் தியாகம் செய்து, அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
இந்நிலையில் செய்கையின் போது நட்டம் ஏற்பட்டால் ஏக்கருக்கு 40,000 ரூபா நட்ட ஈடு வழங்குவதாக கூறப்பட்டது.
ஆனால் அந்த நட்ட ஈட்டை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் அடுத்தடுத்து, இரண்டு போகங்களை செய்து, மிகப் பெரிய சிரமங்களுக்கு உள்ளான நிலையில் விவசாயிகளுக்கென விநியோகிக்க கொண்டு வரப்பட்ட 65,000 மெட்றிக் தொன் யூரியாவில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 258 மெட்றிக் தொன் யூரியாதான் வழங்கப்பட்டிருக்கிறது.
நெல் உற்பத்தி
இந்நிலையில் இங்கையின் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடத்தில் இருக்கின்ற மிக முக்கியமான மாவட்டமாகவும், விவசாயத்தை சுமார் 80 வீதம் நம்பியிருக்கின்ற மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது.
தற்போது அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்து கொண்டிருக்கின்றது. எது எவ்வாறிருப்பினும் இவ்விவசாயிகளுக்கு தற்போது செய்கையை மேற்கொள்ள 8,000 மெட்றிக்தொன் யூறியா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது விடயமாக நான் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளரோடு தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் 23 ஆம் திகதிக்குள் 2,500 மெட்றிக்தொன் யூறியா தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மாபியாக்கள்
மேலும் நாளை விவசாய அமைச்சின் செயலாளரோடு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பேசவுள்ளேன்.
முடிந்தால் விவசாய அமைச்சரையும் சந்தித்து குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைப்பேன். கடந்த காலங்களில் யூரியாவை பல்வேறு மாபியாக்கள் 48,000 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்துள்ளனர்.
யூரியாக்கள்
20,000 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கப்பட வேண்டும்.
இவ்வாறு விவசாயிகளின் கோரிக்கைகளை முடிந்தவரையில் பேசி தீர்வுகளை
பெற்றுக்கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.