அரசாங்கத்தால் சேதனப் பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: திலீபன் எம்.பி
அரசாங்கத்தால் சேதனப் பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
புதிய வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதியில் வருகிற மூன்று மாதத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கோவிட் நிலைமையையும் கருத்தில் கொண்டு கிராமிய மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்குப் பொருத்தமான உற்பத்திகளை இனங்கண்டு அதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசேட தேவைக்கு உட்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் அவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நன்னீர் மீன் பிடியை விருத்தி செய்ய உரியத் திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சமூக பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும். சேதனப் பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வரவு செலவுத் திட்டம் மூலம் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, நொச்சி மோட்டையில் சேதன பசளை உற்பத்திகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் இலவசமாகப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பால் மா தட்டுப்பாடு உள்ள நிலையில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கிராமிய மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் புதிய வரவு செலவுத் திட்டம் மூலம் முன்னெடுக்கவுள்ளது. கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மதகுருமார்கள்,
திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர், பிரதிநிதிகள் மற்றும் பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.