மட்டக்களப்பு மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம் : எஸ்.வியாழேந்திரன் (Photos)
மட்டக்களப்பு ,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2021ஆம் ஆண்டு சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஆட்சிக்காலத்தில் 2இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியாக்கியபோதிலும் ஒரு தமிழ் அரசியல் கைதியையும் விடுதலைசெய்யமுடியவில்லை.ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு 38ஆயிரம் வாக்குகள் மட்டுமேயளிக்கப்பட்டன 16 தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் 72வருடமாக பேய்க்காட்டு அரசியல் செய்தவர்களினால் தமிழ்
மக்களின் உரிமைசார்ந்த அரசியலும் அபிவிருத்தி சார்ந்த அரசியலும் இன்று
கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக முதலைக்குடா பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் குடும்பங்களின் நன்மை கருதியதாக இந்த நீர்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து இந்த குடிநீர் விநியோக திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மூன்றரை கிலோமீற்றர் தூரம் உள்ள மக்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபா செலவில் குடிநீர் விநியோக திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் புஸ்பலிங்கம்,பிரதி தவிசாளர் கோபாலபிள்ளை,பிரதேசசபை உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.