நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்கள், கண்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரி மஹேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு கண்பார்வை இழக்கப்பட்டுள்ளதாக பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண் அறுவை சிகிச்சை
இது தொடர்பாக உண்மையான நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரி மஹேந்திர செனவிரத்னவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் (05.04.2023) ஆம் திகதி 34 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது கண் பார்வை குறைந்த கண்ணில் வெள்ளைப்புரை இருக்கின்றவர்களுக்கே இந்த கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது,
சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் சத்திரசிகிச்சையின் பின்பு தங்களுக்கு கண் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாகவும் கண் உறுத்தல் ஏற்படுவதாகவும் கண்ணில் வருத்தம் ஏற்படுவதாகவும் கண் பார்வை குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்
நாம் உடனடியாக இவர்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பித்ததுடன் இவர்களில் ஒரு சிலரை கண்டி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
அவர்களில் அநேகமானவர்களுக்கு தற்பொழுது 30 சதவீதமான பார்வை திரும்பியுள்ளது. நாம் தொடர்ந்தும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம் என்றார்.
இந்த நிலைமைக்கு காரணம் வைத்தியர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த சத்திர சிகிச்சையின் பின்பு பாவிக்கப்பட்ட மருந்தாகும்.
மருந்தில் கிருமிநாசினி
அந்த மருந்தில் கிருமிநாசினி இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தானது இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது நாம் தற்பொழுது தற்காலிகமாக கண் சத்திரசிகிச்சையை இடைநிறுத்தியிருக்கின்றோம்.
இந்த சம்பவம் நுவரெலியாவில் மாத்திரம் அல்ல கொழும்பிலும் இடம்பெற்றுள்ளது. எனவே இது வைத்தியர்களின் தவறு அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நேரம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும் குறித்த மருந்து பாவிக்கப்பட்டு அங்கும் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தற்பொழுது அந்த வைத்தியசாலையிலும் தற்காலிகமாக கண் சத்திர சிகிச்சை நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.