முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துள்ள பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரும் இது தொடர்பில் பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரதமர் தலைமையில் இது தொடர்பில் ஆராய்வதற்கான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளேன்.
இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமன்றி வடக்கில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.