தடை உத்தரவை நான் பெற்றுக்கொள்ளவில்லை - வினோ எம்.பி பொலிஸாருக்கு விளக்கம்
நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நேரமின்மையால் அங்கு வர இயலாது எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் மாவட்ட அலுவலகத்துக்கு நேற்றையதினம் சென்ற பொலிஸார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக விளக்கத்தைத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நீதிமன்றின் தடை உத்தரவு பத்திரத்தை தான் எந்த சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அது தனக்கு வழங்கப்படவில்லையென்றும் அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.





