கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (PHOTOS)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கிராம அலுவலகர் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியொன்றில் புதையல் தோண்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற கிராம மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பகுதிக்கு களப்பரிசோதனை மேற்கொள்ள சென்ற பெண் கிராம அலுவலகர் சந்தேகநபர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன்னால் குறித்த கிராம அலுவலகர் அச்சுறுத்தப்பட்டதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட போதும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி கிராம மக்கள், சொந்த காணியில் துப்பரவு பணிகளை செய்வதாயின் பிரதேச செயலகத்தில் அனுமதி பெறப்படல் வேண்டும் என்று கூறி காணி துப்பரவு பணியில் ஈடுபடும் வாகனங்களை பிரதேச செயலாளர் கையகப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது கவலை தருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாந்தை கிழக்கு பகுதிக்கு இன்றைய தினம் வருகைதந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



