வன்னியில் காய்த்து குலுங்கும் விளாத்தி மரம்: தடையிடும் வனபாதுகாப்பு பிரிவினர்
வன்னிப் பெருநிலப்பரப்பில் அதிகளவில் காய்த்துக் குலுங்கும் விளாத்தி மரங்களின் காட்சித் தோற்றம் பார்ப்போரை அதிகம் கவர்ந்து விடுவதாக உள்ளது.
பச்சை இலைகளைக் கொண்ட இந்த விளாத்தி மரங்கள் அடர்த்தியாக வெள்ளை நிறத்திலான காய்களை கொண்டிருப்பதால் பார்வைக்கு எழில்மிகு தோற்றத்தினை அவை தருவதாக சுற்றுலா நோக்கில் பயணப்பட்டு வன்னி வருவோர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
விளாத்தி மரங்களின் காய்கள் பழமாகும் போது அவற்றை விளாம்பழம் என மக்கள் அழைக்கின்றனர்.
மனிதர்கள் மட்டுமல்லாது யானைகளும் அதிகம் விரும்பி உண்ணும் ஒரு பழவகையாக விளாம்பழம் இருப்பதாக தண்ணி முறிப்பில் வயல் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
காட்டில் உள்ள விளாத்திகளில் இருந்து அதிகளவிலான விளாம்பழங்களை சேகரிப்பதில் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தடை ஏற்படுத்துவதாகவும் விளாம்பழத்தை சேகரிப்போர் குறிப்பிடுகின்றனர்.
விளாத்தியின் பரம்பல்
விளாத்தி மரம் வறண்ட நிலத்தில் வாழக்கூடிய தாவரமாக இருப்பதோடு அதிகளவில் காய்களை தோற்றுவிக்கும் இயல்புடையதாக இருக்கின்றது.
பச்சை, கரும்பச்சை இலைகளைக் கொண்ட இவற்றின் இலைகள் கூட்டிலைகளாக தண்டில் அதிகளவில் இருக்கின்றன. தண்டுகள் தடித்த மேற்பட்டவை கொண்டவையாகவும் பரந்த வேர்த்தொகுதியை கொண்ட தாவரமாக விளாத்தி இருக்கின்றது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் எல்லா இடங்களிலும் பரந்து வளர்வதோடு விளைச்சலிலும் அதிகளவில் வினைத்திறனுடையதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் விளாத்தியின் வளர்ச்சியை அவதானிக்கலாம் என விவசாய பாடத்துறை ஆசிரியர் ஒருவருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் மேற்படி விளக்கியிருந்தார்.
பொதுவாக மக்களால் விளாத்தி என அழைக்கப்படும் இந்த பழ மரம் லிமோனியா அசிடிசிமா.எல் (Limonia acidissima.L) என்ற விஞ்ஞானப் பெயரையும் கொண்டுள்ளது.கடிபகை, பித்தம், விளைவு , வெள்ளி போன்ற பெயர்களாலும் வெவ்வேறு இடங்களில் விளாத்தி குறிப்பிடப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஊர்ப்பெயரோடு விளாத்தி
விளாத்திக்குளம் என்ற கிராமம் விளாத்தி மரத்தின் பெயரோடு தொடர்புபடுத்தப்படுவதாகவும் இது போல் வன்னியில் மரங்களின் பெயரோடு தொடர்புடையதாக கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு , பாலையடி, நொச்சிமோட்டை போன்ற பெயர்களை தமிழாசிரியர் ஒருவர் சுட்டுவதும் இங்கே நோக்கத்தக்கது.
நொச்சி மரத்தை குறிப்பிட்டு கிளிநொச்சியும் நொச்சிமோட்டையும் விடத்தல் மரத்தை குறிப்பிட்டு விடத்தல்தீவும் பாலை மரத்தை குறிப்பிட்டு பாலையடியும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழர் மரபோடு புரையோடிப்போன தாவரமாகவும் அவர்களது உணவுப் பழக்கத்தோடு ஒன்றி கலந்துவிட்ட பழமாகவும் விளாம்பழம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆலய வழிபாடுகளில் கூட விளாம்பழம் பயன்படுத்தப்படுவதை தமிழர்களிடையே அவதானிக்கலாம்.
விளாம்பழத்தின் சத்துக்கள்
விளாம்பழங்கள் அதிகளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. நடைமுறை வாழ்க்கையில் ஆரோக்கியமான பழவகையாக தமிழர்களால் இனம் காணப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழவகை விளாம்பழம் என்றால் அது மிகையில்லை.
விளாம்பழத்தில் 100 கிராம் அளவில் 70 பங்கு ஈரப்பதனும் 7.3 பங்கு புரதமும் அடங்கியுள்ளது. 7.2 பங்கு வெல்லமும் 1.9 பங்கு கனியுப்புக்களும் 0.6 பங்கு கொழுப்பும் இருப்பதாக குறிப்பிடப்படும் இப்பழத்தில் விற்றமின்களான C மற்றும் A, B² என்பனவும் அதிகளவில் உள்ளன.
கல்சியம் அயன் , இரும்பு அயன் சத்துக்களும் நிறைந்துள்ளது. ஒலியிக், பால்மிடிக், சித்திரிக்கமிலம் போன்றனவும் உள்ளன.
இலையில், விதையில், பட்டையில், கனியில் என வெவ்வேறு பகுதிகளில் உடலுக்கு ஆரோக்கியத்தினை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்களையும் பதார்த்தங்களையும் கொண்டதாக விளாமரமும் அதன் பழமான விளாம்பழமும் இருப்பதாக மனைப்பொருளியல் ஆசிரியை ஒருவருடன் விளாம்பழத்தின் பயன்கள் தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.
பிராந்தியத்தில் அதிகளவில் இயற்கையாகவே விளையும் விளாத்தி போன்ற பயன்மிக்க பழங்களின் விளாத்தி போன்ற தாவரங்களின் அறிவியல் சார்ந்த தகவல்களையும் பயன்களையும் மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆயினும் அவ்வகை பழக்கம் மக்களிடையே மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
தடையிடும் வனப்பாதுகாப்பு பிரிவினர்
விளாத்திகளை பயிர்ச்செய்கையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படாத ஒரு சூழல் இன்று வரையும் தொடர்ந்து வருகின்றதனை அவதானிக்கலாம்.
அதிக பயனுடைய பழங்களையும் தாவரப் பகுதிகளையும் கொண்ட விளாத்தி வன்னியின் காடுகளில் அதிகளவில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியின் பல பாகங்களிலும் காட்டு பழமரங்களான பாலை மற்றும் நாவல், விளாத்தி போன்றவற்றில் பழங்களை சேகரித்து சந்தைப்படுத்தலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதனை அவதானிக்கலாம்.
A9 வீதியில் பல இடங்களில் இந்த வியாபாரிகளை அவதானிக்க முடிவோடு பழங்களையும் தேன் மற்றும் விறகு போன்றவற்றையும் அவர்களிடமிருந்து பயணிகள் வாங்கிச் செல்வதையும் உதாரணமாக இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
ஆயினும் சில இடங்களில் காடுகளில் இருந்து விளாம்பழங்களை சேகரித்து வந்து விற்பனை செய்வதற்கு வனபாதுகாப்பு அதிகாரிகள் தடையிடுவதாக இதனோடு தொடர்படைய அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
விளாம்பழங்களை விற்று தங்கள் பொருளாதாரத்தை சரி செய்து கொள்ள முயற்சிக்கும் அவர்களுக்கு இந்த செயற்பாடு இடையூறாவதோடு அவர்களது பொருளாதாரத்தையும் பாதிப்படைய செய்வதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
ஆனைகளுக்கான உணவாக விளாம்பழங்கள் இருப்பதால் அவற்றை சேகரித்து வருவது தடைசெய்யப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வனபாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
விளாத்தியை வேலி ஓரங்களில் நடுகை செய்து பயனடைய முயற்சிக்கும் போது மக்கள் குடியிருப்புக்களிலேயே அதிகளவிலான விளாம்பழ உற்பத்தி நடைபெறக்கூடியதான சூழல் தோன்றிவிடும்.ஏன் இது பற்றி மக்கள் சிந்திக்கத் தலைப்படவில்லை என சமூகவிடய ஆய்வாளர் கேள்வியெழுப்பி இருப்பதும் கருத்திலெடுக்கத்தக்க விடயமாகும்.
விளாம்பழங்களை மூலப்பொருளாக கொண்டு பழப்பாகு மற்றும் பழச்சாறு போன்றவற்றை உற்பத்தி செய்துவரும் தொழில்துறைகளும் இருக்கின்றன என்பதையும் மக்கள் கருத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |