ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் வெளியிட்டவர்கள் மீது எஸ்.வியாழேந்திரன் முறைப்பாடு
தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக தன் மீது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ஊடகங்கள் மற்றும் முகநூல் புத்தகத்தில் காணொளியாக வெளியிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாவிகரை வீதியில் அமைந்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு - வரவேற்பு கோபுரம், திருகோணமலை வீதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எனது பெயரைக் கடந்த 6ஆம் மாதம் 21 ஆம் திகதி எனது வீட்டுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பேசியுள்ளனர்.
என்னை நேரடியாக தொட வந்த நபரை நான் தான் அடித்துச் சுட்டுக் கொன்றதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நான் வெளியே தனியாக வந்தால் அடித்துக் கொல்லுவோம் என உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது.
அதேவேளை ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறி பதாதைகளில் எனது பதவியைக் காட்சிப்படுத்தி அங்கு மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்துக்கும் எனக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்த போதும் மகாலிங்கம் தம்பதியினர் தொடர்ச்சியாக ஊடகங்கள் முன்பாக மிகப்பொய்யான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.
இந்த வழக்கு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. அவ்வாறு நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகின்ற போதும், இவர்கள் நீதிமன்ற வழக்கு முடிந்து வெளியில் வந்தபின் உண்மைக்குப் புறம்பான செய்திகளை என்னையும் எனது குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி மிகவும் மோசமான முறையிலே பொய்யான விடயங்களைக் கூறி வருகின்றனர்.
எனவே தொடர்ச்சியாக இவற்றைப் பொறுத்து கொள்ள முடியாத பட்சத்திலே நான் இன்று மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில், இவர்கள் ஊடகங்களுக்கு அளித்த செய்திகளையும் காணொளிகளில் பேசிய காணொளியைப் பதிவு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்து இதனை உடனடியாக விசாரணை செய்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளேன்.
அத்துடன் என்னையும் எனது குடும்பத்தையும் இணைத்துத் தெரிவிக்கும் குற்றச்சாட்டை நீதிமன்றில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். இப்போது அரசியல்வாதிகளின் அரசியலுக்காக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
அன்றையதினம் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், மாநகரசபை உறுப்பினர் உட்படப் பலர் உண்மைக்குப் புறம்பாக நீதிமன்றில் வழக்கு நடக்கும் போது திரிவுபடுத்தி வார்த்தை பிரயோகம் செய்துள்ளனர்.
அதேவேளை அன்றையதினம் தா.ரஞ்சன், என்னை வெளியில் கொண்டுவருமாறும் அவரை தானே அடித்து கொலை செய்வேன் எனப் பகிரங்கமாக ஊடகங்களிலே உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அது மாத்திரம் அல்ல பேருந்து வண்டிகளை நிறுத்தி பொதுமக்களிடம் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
எனவே எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் சார்ந்த அச்சுறுத்தல் இடம்பெற்றால் இவர்களும் இவர்களைப் பயன்படுத்துகின்ற அரசியல் வாதிகளும் காரணம் என முறைப்பாடு செய்துள்ளேன்.
அவ்வாறே கணவதிப்பிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் தொடர்ச்சியாக முகப்புத்தகங்கள் ஊடாக காணொளியாக உண்மைக்குப் புறம்பாக நான் கொழும்பில் 34 பேர்ச் காணியை 40கோடி ரூபா பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக நேரலை காணொளி மூலம் குறிப்பிட்டு மிகவும் மோசமான வார்த்தைகளால் என்னைத் திட்டி செய்திகளை வெளியிட்டுவருகின்றார். இவருக்கும் எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல்வாதிகளோ அல்லது எவராயினும் நீதிமன்றில் முன்வைத்து நிரூபித்துக் காட்டவேண்டும். இல்லாத பட்சத்திலே நீதிமன்றில் வழக்கு தொடர்வது மாத்திரமல்ல, எனது உளரீதியானதும் எனது பதவிக்கும், பெயருக்கும், புகழுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திய செயற்பாடாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் செயற்பாடாகவும் இதைப் பார்க்கின்றேன்.
இந்த பொய்யான கருத்துக்களை வெளியிட்ட அத்தனை பேருக்கும் எதிராக வழக்கு
தாக்குதல் செய்து நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். அதேவேளை இவர்களுக்கு எதிராகப்
பல மில்லியன் ரூபா கேட்டு ஒவ்வொருவருக்கும் மானநஷ்ட வழக்குத் தொடர இருக்கின்றேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
