ஜனாதிபதியால் விடுக்கப் பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜே.வி.பி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு
பதவியேற்ற பின்னர் ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் விஜயதாச ராஜபக்ச முதலாமவர் அல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் கூட ஜனாதிபதியினால் அச்சுறுத்தப்படும்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாக ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு.
ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரச தகவல் துறை அல்லது தனது கம சமக பிலிசந்தரா நிகழ்ச்சியின் மூலம் அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். எனினும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனையை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாகவே ஜேவிபி உயர்நீதிமன்றத்தை நாடியது என்றும் அநுரகுமார கூறியுள்ளார்.
இந்த யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை அரசாங்கம் பறித்திருக்கிறது இது ஒரு நீண்ட விடுமுறை முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதன் மூலம் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற சட்டத்தரணிகள்; கூட வழக்குகளைத் தாக்கல் செய்ய கொழும்புக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
அரசாங்கத்தின் முதல் முயற்சி உயர் நீதிமன்றத்துக்கு செல்லவிடாமல் யோசனைக்கு
ஒப்புதல் பெறுவதாகும்.
இரண்டாவது முயற்சி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது
என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.