விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஏன்..! எழுந்துள்ள கேள்வி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்தியது
இந்நிலையில் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை.
இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
பதவியேற்க அனுமதிக்க வேண்டும்
என் சகோதரர் மு.க.ஸ்டாலின் மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அறிவித்திருக்கிறார்.
அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக அனுமதிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜகவும் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷா - (பிரதமர்) மோடி ஆகியோரும் தமிழ்நாடு அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகின்றனர்.
தவெக தனிப்பெரும் கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அக்கட்சி தலைவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டும் வழிகாட்டுதல்.
அவர் ஆதரவு கோரிய நிலையில் இன்னும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இங்கு குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.