சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)
கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மக்களின் போராட்டத்திற்கும் உரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தாதே, ஜோசப் ஸ்டாலினை உடன் விடுதலை செய், கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய், மக்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தி பழிவாங்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யுமாறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதன்போது வவுனியாவின் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து அதிபர், ஆசிரியர்கள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சமூக மட்ட செயற்பாட்டளாகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்களினால் பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் கே.கமலசேகரம் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் “தோழர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம், அரசே எமது செயலாளரை உடனடியாக விடுதலை செய்” போன்ற வாசகம் அடங்கிய பதாதைகளுடன் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை
நாட்டின் ஜனநாயகத்தினை நிலை நாட்டும் ஜனாதிபதி ஆசிரியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைதுசெய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன்றலில் ஆசிரியர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது ஆசிரியர்களின் உரிமைகளுக்காக போராடும் ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமை வேதனை அளிக்கிறது எனவும், அவரது கைதிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - நவோஜ்,தீபன்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
