சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறும் ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
"அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வருகின்றன. என் வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெறுகிறேன். எனது இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்" என்று அவர் தமது டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த 41 வயதான ஹர்பஜன் சிங், இந்தியாவிற்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 20 கு 20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன் 163 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது முதன் முறையாக அறிமுகமான ஹர்பஜன் சிங், இறுதியாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டாக்காவில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது இந்தியாவுக்காக விளையாடினார்.
2001 மார்ச்சில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, முதல் டெஸ்ட் ஹெட்ரிக் உட்பட, மூன்று டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் சாதனையாக கருதப்படுகிறது.