வெருகல் பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வசம்: கபில நுவன் அத்துகோரல
இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த வெருகல் பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வசம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரல (Kapila Athukorala) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி வசமிருந்த திருகோணமலை வெருகல் பிரதேச சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெருகல் பிரதேச சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், சபையின் தவிசாளருமான க.சுந்தரலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 06 உறுப்பினர்களும் எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் மேலதிக ஒரு வாக்கினால் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெருகல் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரம் இலங்கை தமிழரசு கட்சியின் வசம் இருந்த போதிலும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாக்கெடுப்பின் போதும் தற்போது தோற்கடிக்கப்பட்டு தமிழரசு கட்சியின் அதிகாரங்கள் இன்றுடன் இல்லாமல் போயுள்ளது.
2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடித்த இந்த சூழ்நிலையில் எம்மோடு இணைந்து கைகோர்த்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன் வாருங்கள் என்று வெருகல் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை எடுத்துக்கொண்டால் பலக்கூட்டு கட்சிகளுடன் இணைந்து ஒரு கட்சியாகவே காணப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது எங்களுடன் இருக்கின்ற சகோதர கட்சிகளில் அதுவும் ஒன்று இவ்வாறு இருக்கையில் ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளுக்கு முடிவு எட்டப்படமாட்டாது.
கட்சிகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கின்றது. ஒவ்வொரு செயற்பாடுகள் இருக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் சகோதர கட்சிக்குள் சில சில முரண்பாடுகள் ஏற்படலாம் எவ்வாறு ஏற்பட்டாலும் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றத்திலும் சரி, பிரதேசசபைகளும் சரி தனியாக ஒரு ஆட்சி பீடத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை.
எனவே சகோதர கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு விலகி தனித்து செயற்படுவார்கள் என எண்ணுவது சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்த வகையிலும் எந்த ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இயங்கும் என நாங்கள் நினைக்கவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |