கோட்டாபய நியமித்த குழுவிலிருந்து வெளியேறிய பௌத்த தேரர்: நாட்டின் அழிவு தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தனது எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், தொடர்ந்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்க போவதில்லை என பெங்கமுவே நாலக தேரர்(Ven bengamuwe nalaka thero) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிக்கு ஆலோசனை குழுவில் இருந்து தான் விலகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
களனி அசோகாராம விகாரையில் நேற்று நடைபெற்ற திறப்பு விழா ஒன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நாலக தேரர்,
அரசாங்கத்தில் இருப்பவர்கள் எவரும் சொல்வதை கேட்பதில்லை. இதனால், ஆலோசனைகளை கேட்டால், கூறுவோமே அன்றி, அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதில்லை.
ஆலோசனை குழு என்ற குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அதில் இருந்தும் நான் விலகி விட்டேன். நாங்கள் கூறுவதை கேட்பதில்லை என்பதால், அப்படியான இடங்களில் இருப்பதில் அர்த்தமில்லை.
கேள்வி - இப்படி ஆலோசனைகளை கேட்காத அரசாங்கம் நெடுந்தூரம் செல்ல முடியுமா?
பதில் - செல்ல முடியாது. சென்றால், நாடு அழிவில் போய் முடியும். மீண்டும் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தால், அது தவறான மற்றும் முட்டாள்தனமான எண்ணம். இப்படி வேலை செய்து, மக்களின் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறியுள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர், தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட பிக்குமார்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.