வேலணை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்களுக்கிடையே குழப்பநிலை
துறையூர் மீன் சந்தையை குத்தகைக்கு வழங்குதல் தொடர்பாக எழுந்த விவகாரத்தால் வேலணை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் களோபரமாக உருவானதால் தவிசாளரால் சபையின் அமர்வு 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது துறையூர் மீன்சந்தை குத்தகை தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு இருக்கின்ற தற்காலிக கொட்டகை அகற்றப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் குறித்த சந்தையை பிரதேச சபையின் சட்ட வரையறைகளுக்கு ஏற்ப வரியை அறவீடு செய்து பிரதேசத்தின் வருவாய் அதிகரிப்புக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அதிகளவன உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் குறித்த பிரதேசத்தை உள்ளடக்கும் தேசிய மக்கள் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் குறித்த சந்தை இறங்குதுறை என்றும் அங்கு மொத்த விற்பனை செய்ய இடமளிக்க வேண்டும் என்றும் எதிர்க் கருத்தை முன்வைத்து விவாதித்தனர்.
முரண்பட்ட கருத்துக்கள்
குறித்த விவாதம் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வாதமாக உருவாகி வெளி இடங்களில் இருக்கும் சந்தைகளை மேற்கோள் காட்டி விவாதிக்கும் போது உறுப்பினர் கருணாகரன் நாவலன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான லோகேந்திரன் இதயதீபனை நோக்கி சந்தை வருவாய் தொடர்பான உண்மை நிலை தெரிந்தும் கந்துக்குட்டி" தனமாக மத்தியின் இடையீட்டால் சபையின் வருவாயயை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கருத்துக் கூறியிருந்தார்.
"கந்துக்குட்டி" என்ற சொல்லாடலால் கோபமுற்ற உறுப்பினர் இதையதீபன் நாவலனை நோக்கி விகிதாசார உறுப்பினரக இருந்துகொண்டு நேரடியாக வெற்றிபெற்ற எம்மை நோக்கி இவ்வாறு கருத்துக் கூறவேண்டாம் என விகிதாசார உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சொல்லாடல் செய்திருந்தார்.
இதையடுத்து சபையின் 22 உறுப்பினர்களில் 10 விகிதாசார உறுப்பினர்களும் குறித்த சொல்லாடல் தமக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த சொல்லாடல் பின்வாங்கப்பட்டு குறித்த உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என கோரி சபையில் இருந்து வெளியேற முயற்சித்தனர்.
இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து சபையின் அமர்வை தவிசாளர் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக கூறி வெளியேறியிருந்தார்.
ஒத்திவைப்பின் பின் சபை மீண்டும் கூடியபோதும் குறித்த விடையம் விவாதிக்கபட்ட நிலையில் குறித்த உறுப்பினர்கள் இருவரும் தத்தமது கருத்தை பதிவுசெய்து பகிரங்க மன்னிப்பு கோரினர்.
அத்துடன் மூன்றாவது நபராக இடையீடு செய்து சபையின் நடவடிக்கைக்கு இடையூறு செய்தமைக்காக உறுப்பினர் நடனசிகாமணியும் மன்னிப்புக் கோர வேண்டும் என தவிசாளர் வலியுறுத்தியதன் காரணமாக மன்னிப்புக் கோரியிருந்தார். இதையடுத்து சபை மீண்டும் இயல்புக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
