மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 4 ஆயிரம் வாகனங்கள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள மறுப்பு
வாகன இறக்குமதி தொடர்பில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முதல்நாள் மோசடியான முறையில் நான்காயிரம் வாகன இறக்குமதிக்கான கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியில் 50% புதிய கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முந்தைய நாளான மே 15 அன்று 4000 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உடனடி விசாரணை
நேற்று (21)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வர்த்தமானி அறிவித்தலில் இருந்து அதாவது மே 18ஆம் தேதி முதல் 9429 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரியில் 50% புதிய கூடுதல் கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. இது மே 16 முதல் 03 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
மே 15 அன்று அல்லது அதற்கு முன் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50% கூடுதல் கட்டணம் பொருந்தாது. அதன்படி, தற்போதுள்ள 30% சுங்க இறக்குமதி வரியுடன் 50% புதிய கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும். அதன்மூலம் வாகனங்களின் விலை 15% அதிகரிக்கிறது.
இந்த வரி திருத்தத்திற்கு முன்னர், சில வாகன இறக்குமதியாளர்கள் சுமார் 4000 கடன் பத்திரங்களை திறந்து வைத்துள்ளதுடன், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பான தகவல்களை உடனடியாக விசாரணை செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு முன்னர் மே 15 ஆம் திகதி வாகன இறக்குமதிக்காக 1782 கடன் பத்திரங்கள் மாத்திரமே திறக்கப்பட்டதாக நிதி அமைச்சு கூறுகிறது.
மேலும், மே 18 அன்று 9429 கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.