சட்டவிரோதமாக மரப்பலகைகள் கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது
மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி முதிரை மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு கப் ரக வாகனம் ஒன்று பயணித்துள்ளது. இதன்போது ஏ9 வீதியில் பயணித்தால் பொலிஸாரிடம் மாட்டிக்கொள்ளலாம் என நினைத்த சாரதி, பொலிஸாரின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இரணைமடு சந்தியிலிருந்து உள்வீதியான திருவையாறு பகுதியூடாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

அதேநேரம், திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்காக பொலிஸாரால் வீதித்தடை போடப்பட்டிருந்தது. அவ்விடத்தில் குறித்த கப் ரக வாகனத்தை பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர்.
பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிக வேகத்தில்:திருவையாறு பகுதியிலிருந்து இரத்தினபுரம் ஊடாகவும், அங்கிருந்து ஏ9 வீதி டிப்போ சந்தி ஊடாக கனகபுரத்திற்கும், பின்னர் கனகபுரம், உதயநகர் மற்றும் விவேகானந்தா வீதி ஊடாகவும், மீண்டும் பாரதிபுரம் வீதி வழியாக ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதிக்கும் ஆபத்தான முறையில் செலுத்தியுள்ளார்.

பொலிஸார் ஓயாது துரத்திய நிலையில், ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் கப் ரக வாகனம் சென்றுகொண்டிருந்த போது, அதன் சக்கரத்தின் ஆணிகள் உடைந்ததால் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாமல் வீதியில் நின்றது.
உடனடியாக வாகனத்தை நிறுத்திய சாரதி, பொலிஸார் நெருங்குவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எனினும், வாகனத்தில் இருந்த சாரதியின் உதவியாளரை பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கப் ரக வாகனத்தையும், அதிலிருந்த பெருமளவிலான சட்டவிரோத முதிரை மரப்பலகைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட உதவியாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய சாரதியைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மரப்பலகைகளை கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09.07.2026) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் கப்ரக வாகனம் ஒன்றில் பெறுமதி வாய்ந்த முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.
வாகனம் சோதனை
இந்த நிலையில் திடீரென கிளிநொச்சி பொலிஸார் ஏ9 வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியில் வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri